அதிமுக கூட்டணிக்கு படையெடுக்கும் கட்சிகள். உற்சாகத்தில் இபிஎஸ்..!!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் முக்கிய கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.
குறிப்பாக, நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் சி.பி. பிரபு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் டாக்டர் இராஜன் மற்றும் அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவையின் தலைவர் சோ. ஜெயமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்குத் தோள் கொடுப்பதாக உறுதியளித்தனர்.
அடுத்தடுத்து பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எடப்பாடியாரைத் தேடி வந்து ஆதரவு தெரிவித்து வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
